Dec 13, 2010

மழைமகள்

செல்லத் தாரகையே...
என்ன தான் வரையப் போகிறாய்..
உன் நீர் தூரிகையால்...??

இன்று உன் தூரலில் நனையவே..
உடலோடு உயிர்
ஒட்டிக் கொண்டது போல்
ஒரு அழகான உணர்வு தந்தாய்...

நீ வரின்..
வானத்தில் போடுகிற
கார்மேகக் கோலம்
காணக் காண அழகு!

எந்தக் குளத்திலிருந்து
நீரள்ளி வருகிறாய்
இத்தனை தெளிவாய்...

நீ வந்து போடும்
உறவு பாலம்
வானையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை....

எங்கள் வாழ்வையும் தழைக்கச் செய்கிறது!

இன்று பிறந்த குழந்தை போல்
சிணுங்கிக் கொண்டே நீ
தூறும் போது

யாருக்குத் தான் ஆசை வராது...
உன்னை தொட்டுப் பார்க்க... ???

என்னிடம் யாருந்தன்
காதலி என்று கேட்டால்...
மழை தான் என் முதல் காதலி என்பேன்..

ஏன் எனில்
நீ மட்டும் தான்
என்னை முதல் முறை
முத்தமிட்டாய்...

உச்சி முதல் பாதம் வரை!!!

நீ இடுகிற முத்தத்தில்
நான் பலமுறை காய்ச்சல் கண்டேன்...

இருந்தும்
இதுவரை ஒருமுறை கூட
உன்னை திட்டியாதே இல்லை நான்...

என் உயிர் தோழியை 
தொடுகிற
உரிமையை
உனக்கு மட்டும் தந்தேன்...

அவள் துப்பட்டா நுனி தாண்டி
வழிகிற உன்னை கையில் ஏந்திய போது
ஆண்டுக்கணக்காய் தண்ணீரை காணாது கண்ட நிம்மதி!

நீ பாரபட்சமின்றி சிந்தும் போது
உனக்குள் அப்படியே கலந்து போகத் தோன்றும்...

உன்னால் தெருவெல்லாம்
சேறு பட்டாலும்
உன் தடவுதலில் தானே...

பூமி சுகம் கொள்கிறது!

எத்தனை வேகத்தடை இருந்தும்
சீறிப் பாய்கிற எந்த வாகனமும்
உன் பொழிதலில்
கொஞ்சம் நிதானம் காட்டும்...

நீ ஒரு செல்லத் தாரகை...
சொட்டச்சொட்ட பேசுவாய்...

நீ குட்டினால்...
யாருக்கும் வலிக்காது..!!

மழைக்கே உரிய மனசை
புரிந்து கொண்ட செடிகளெல்லாம்
நீ வரும் போது
முகம் உயர்த்திக் காத்திருக்கும்
குளியல் போட!

மழைக்கரமே....

நீ எங்கள் தலைத் தொட..

புனிதமாகும்
எங்கள் பூமிக்காடு

உன்னில் கலந்தால்

கொஞ்சம் தணிந்து போகும்
எங்கள் கவலைச்சூடு!!!

4 comments:

  1. ஏன் எனில்
    நீ மட்டும் தான்
    என்னை முதல் முறை
    முத்தமிட்டாய்...

    உச்சி முதல் பாதம் வரை!!!

    nallaruku

    ReplyDelete
  2. எப்போது மீண்டும் மழை வருமென ஏங்கத் தோன்றியது இதை படித்தவுடன்

    ReplyDelete
  3. சின்ன வயசுல நெனஞ்சிருக்கோம்... இப்போ ஏது நேரம்

    ReplyDelete