Sep 29, 2012

அன்பே இல்லாத உனக்கு...

சந்தன தேன்நெருப்பே
நீ  சிரித்தே அல்லவா
சேதமிழைத்தாய்..

உன் கன்னக்குழியில்
காணாமல் போனதாய்
எந்த சபையில் போய் சொல்வது..

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
நிலவின் கிண்ணம் தாண்டி
வழிந்த ஓர் அருவியில் நனைந்ததுண்டு..

நெற்றி முடி விலக்கி நீ பேசியதில்
மென்மழை தூரலில் குதிதெழுந்ததாய்
அப்படி ஓர் ஆனந்தம்...

உன் பாட்டில் எதிரே வந்து
உயிர் கடத்தல் செய்துவிட்டு ஓடுவாய்
கட்டிழந்து ஓடும் தேனருவியாய்..


அந்த வசீகரத்தால் ஈர்க்கப் பட்டு
உன்னை மட்டும் முகர்ந்து
சுவாசம் துறக்க ஆசைப்பட்டதுண்டு..

நீ விரித்த எழில் தூண்டிலில்
மாட்டிக் கொண்ட எத்தனையோ பேர்களில்
உன் நெஞ்சம் கவர்ந்தது நேசம் வார்த்தது
நான் மட்டும் என எண்ணி இருந்தேன் ..

இத்தனை நாளாகியும்...

உன் குளிர் நிறைந்த முகம் கண்டு
தேக்கி வைத்த முத்தத்தை எல்லாம்
தாராளமாய் தரவே

இந்த கூட்டுக்குள் உயிர்
நிரம்பி கிடக்கிறது.....

உமிழ் நீரை உதட்டுக்குள் அடக்கியது போல்
உன் மீது நான் கொண்ட எண்ணமெல்லாம்
வேதனை தருகிறது..

நீ... என்னை... கடந்து மட்டும்  தான் போனாய்...

அதை காதலென்று எண்ணிக் கொண்டது
என் தவறே....

நீ முகம் பார்க்கும் கண்ணாடியாகி
அரை நிமிடம் உன்னை ரசித்துவிட்டப் பின் 

நீர்த்துவிட்ட ஒரு திசுவாய்
நிறம் தொலைத்து போனாலும்...

அந்த இறப்பில் ஒரு சுகமிருக்கும்..
நான் சேமித்த அற்ப ஆசைகளுக்கு அர்த்தம் கிடைக்கும்..

சந்தன தேன்நெருப்பே
நீ  சிரித்தே அல்லவா
சேதமிழைத்தாய்...

Sep 26, 2012

பிழை இல்லா ஒரு கவிதை...

ஆயிரமாயிரம் வார்த்தைகள்

ஏறிட துடித்ததை
சொல்லாமல் சொன்னது
அழகான வெள்ளைத் தாள்...

மீண்டும் அருகில் எடுத்து நான் கொஞ்ச 
ஏங்கி இருந்ததை அழுத்தமாய் சொன்னது
எழுதுகோள் ...

தூசு படிந்த எனது சிந்தனை
தூரமாய் போன கற்பனை...

ஒன்று திரட்டி அமர்கிறேன்...

காகிதத்தின் மடியில்
என்னைத்  தொலைத்து 
இன்னுமொரு கவிதை தேட..

நீண்ட நாள் கழித்து
வகுக்கும்  கவிதையல்லவா

கை கொண்டு தாங்காமல்
தன் மடி கொண்டு தாங்குவதாய் 
புன்சிரித்தது
வெள்ளைத் தாள்....

அணு அணுவாய்
புதைந்திருந்த மௌனமெல்லாம்

மறுபடியும் கவிதையாய்
வரவே
வரம் வேண்டி காத்திருக்கிறேன்...

பிழை இல்லா
சில வரிகள்
எழுதுவதில் உள்ள சுகம்

காற்றின் சிறகடிப்பில் கரைவதிலும் இல்லை...
கார்கால மழையடிப்பில் நனைவதிலும் இல்லை....

மெல்ல கண்களை மூடி
உலகின் கதவடைத்து
ஒருநிலையாய் யோசிக்கிறேன்..

வார்த்தையில் வஞ்சமில்லா....
ஒரு கவிதை...
 
வானம் பூமி பூக்கள் தேன் நான் நீ காற்று ஆகாயம் மழை
மௌனம் மரணம் காதல் கனவு நிலா நட்சத்திரம் நித்திரை
அன்பு வெளிச்சம் இருள் விண்வெளி வெறும்தரை...

இரண்டே வரிகளானாலும்
இந்த சொற்கள் இல்லா புது கவிதை

வேண்டும்....

மீண்டும்...
மீண்டும்.....