Oct 31, 2010

மனசிலிருந்து

உனக்கு பிடித்தாலும்
பிடிக்கவில்லை என்றாலும்

என் விரல்கள் விட்டு வழிகிற
இந்த வார்த்தைகளை
ஒரு முறையேனும் வாசித்து விடு

ஆனந்தம் கொள்ளும் என் காதல்..

அன்பே.. உன்னை என் மடியோடு கிடத்துகிற அந்த
பொழுதில்
மோகத்தையும் மிஞ்சுகிற என் தாய்மை
சொல்லும்
நமக்கான புரிதலை..

உன் இதழ்களை
குறிவைப்பதில்லை
என் இளமை...

உன்னை உச்சி முகர்ந்தல்லவா..
புன்னகை பூக்கிறது?

உனக்கு தெரியுமா..
உன்னை பார்க்கும் முன்பு வரை...

நான் யாரையும் நேசித்ததில்லை
நேசிக்கப்பட்டதும் இல்லை!

காய்ந்த மண் எப்படி
மழைத்துளியை
பார்த்து சிலிர்க்குமோ..

அப்படித்தான்
நானும்
உன்னை பார்த்து ஈரமானேன்...

நீ தான் எனக்கு
நடைப்பழக்கினாய்..

உன் விரல்களை இறுக பிடித்த போது தான்
எனக்கான பாதை
தெளிவுப்பட்டது!

எனக்கு தெரியாத கவிதை கூட
உன்னால் பரிச்சயமானது..

சில நேரம்
என் காதல் எல்லை தாண்டி போய்க்கொண்டே இருக்கும்...

உன்னிடம் ஒன்று மட்டும் கேட்பேன்...

என் நரம்புகள்
நாளங்கள்
உதிரம்
தசை

எல்லாம் எடுத்துக்கொள்

என்னை மட்டும் காதலிக்கும்
என் தேவதையாய்

எனக்கும் சேர்த்து
நீ வாழ வேண்டும்

எப்போதும் எனக்கான ஓருயிராய்...

1 comment: