Nov 26, 2010

முயன்று பார்ப்போம்.!

மனசுக்குள் உட்கார்ந்து
மலர் பறிக்கிறாய் - என்
கனவுக்குள் தீ வீசி
குரல் கொடுக்கிறாய்...

என் கவிதைக்கு
வார்த்தையாகி வரம் தருகிறாய்- என்
வாசலோடு நீ மட்டும்
வாசமாகிறாய்..

ஒடியாத கிளை நான் என
உள்ளம் சிலிர்த்திருந்தேன்
கிளி உட்கார்ந்து போனவுடன்..
வளைந்து போனேன்..

வற்றாத கடல் நான் என
வசந்தம் கொண்டேன்
உன்னை பார்த்தவுடன்
மடியோடு வற்றிப் போனேன்...

ஒரு கோடி மின்னல் பூ
மனதுக்குள்
தினம் ஊர்வலம் போகின்ற - நல்
அனுபவம் நீ தந்தாய்...
இதுதான் உயிர் கொள்ள காரணமோ
வியந்து போனேன்..

இறந்தாலும்
கொண்ட காதல் இறப்பதில்லை..
இது உண்மையென்று ஒரு போதும்
நம்பியதில்லை...
இப்போது இதுபோல் ஒரு மெய் இல்லை
புரிந்துகொண்டேன்...

ஒற்றை பார்வையில்
காதல் பற்றியது
மிச்சம்
உன்னை நிலா வெளிச்சத்தில் பார்த்து வந்தது...
நிலா அன்று மிக அருகில் நின்றது!

உற்றுப் பார்த்தாய்...
உயிரே போனது..
என் உயிர் எடுத்து பின் சிரித்தாய்...
மீண்டும் எனக்கு உயிர் வந்தது...

நிச்சயம்..
இனி வரும் காலம்
உன்னை கண்ணுக்குள் வைத்து
காத்திருப்பேன்..
கண்ணே உன் உயிர் வளர்ப்பேன்....

உள்ளுக்குள் ஓராயிரம் சிறகுகள் கொடுத்தாய்..
இருந்தும்..
நதி எங்கே படர்ந்து திரிந்தாலும்
கடலோடு கை சேர்க்கும்...

நானும் அப்படித்தான்...

நீ மட்டும் உடன் இரு
மரணம் அஞ்சுகிற நேசம் கொடு...
காலத்தைத் தின்று செரிக்கும்
காதலது சாத்தியமா...
வா... முயன்று பார்ப்போம்.....!!!

No comments:

Post a Comment