Nov 2, 2010

பிரிவுரை

என் அருமை காதலே
ஏன் பிரிந்தாய்

ரோஜாக்கள் கேட்டாய் நீ
என
மனதுக்குள் பதியம் போட்டேன்

கண்ணீர் துளி கொண்டு
காவல் வார்த்தேன்

என் பூமி பார்த்த
முதல் பூவே...

மனதுக்குள் போட்ட பதியம்..
மலரும் முன் ஏன் பிரிந்தாய்...

விடைபெறும் நாளில் மட்டும்
என்னை பேசச்சொல்லி இம்சித்தாய்...

என் நாக்கில்
மௌனம் இறுக்கமாய்
அமர்ந்து கொண்டது...

ஏன்...
கனவுகளில் மட்டும் வந்து
நலம் கேட்கிறாய்...

உண்மையில் நீ பிரிந்த நாளில் தான்
நான் இறுதியாய் வாழ்ந்தேன்...!!!

அழுதாயே அன்று...
என் தோள் சாய்ந்து..

உன் அழுகையை துடைக்க
ஏன் இதயமும் நீண்டதே
தெரியுமா...

"உனக்கு மட்டும் நான்" என்று
உறுதிமொழி பேசிவிட்டு
எங்கே போனாய்??

உலகின் துயரங்களை
ஒட்டுமொத்தமாய்
எனக்கு தந்துவிட்டு ???

நமக்குள் பிரிவு வந்தால்....
கண்ணீரால் புள்ளி வைத்து
தொடங்கி வைப்பவள் நீயல்லவா...

இந்த பிரிவின் நீடிப்புக்கு மட்டும்
ஏன் மௌனத்தை பதிலாக்கினாய்..?

உன் மொழிகள் புரியாது...
வெறித்துப் பார்ப்பாய்...
அர்த்தம் தெரியாது...

நான் எதிர்பாராத போது
என் கண்ணுக்குள் கண் வைத்து
காதல் பூசுவாய்....

எப்போதாவது தேடி வந்து முத்தம் கேட்பாய்
என் இதழ்கள் சிலிர்த்துப்போகும்..

உன் இதழ்களை
விரல் கொண்டு தடவும் போதும்....
கடல் அலையாய் நகர்ந்து போவாய்....

பொய் சொல்ல நினைத்து
உன்னிடம் மாட்டிக்கொள்ளும் போதெல்லாம்...
என் அம்மாவின் வாசனை
உன் மீது அடிக்கும்..

உன்னை காதலிக்கும் வரை....
என்னை நான் ஒருமுறை கூட
உற்றுப் பார்த்ததில்லை

இன்னும் சொல்லவா...
என்னை யாரும் உயிர் வரை உரசிப்போனதில்லை....

நீ தானே..
மாலை வரை என்னை
இதமாய் தொடர்வாய்...

நான் கலங்கிய போது
கை விரல் கொடுப்பாய்...

இப்போது எப்படி அன்பே...
உன்னை விட்டு நான்...???

என்னை பிரிந்த அந்நாளில்
நீயும் துடித்திருப்பாய்...

தூக்கம் துறந்து தேய்ந்திருப்பாய்....

கண்களின் ஓரம் எனக்காக
கண்ணீர் வடித்திருப்பாய்...

தெரியும்...
என்னை பிரிந்த போது..
நீயும் தான்
செத்திருப்பாய்...

இருட்டுக்கு தெரியாது
நிலாவின் அருமை...
தன்னுடன் அது இருப்பதால்....

நானும் தெரிந்து கொள்ளவில்லை
உனது பெருமை...

உயிர் சிந்தி அழுதாலும்
ஆற்றாது வலி....

சொல் என் சிநேகிதி...

மனதுக்குள் நான் போட்ட
ரோஜா பதியம்
மலரும் முன்
ஏன் பிரிந்தாய்....????

1 comment: